வேலூர், ஜூலை 18: வேலூர் மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழைய பேலட் பேப்பர் அழிக்கும் பணிகள் தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தொகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் உள்ளிட்டவற்றின் முதற்கட்ட ஆய்வு பணிகள் வேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தலில் 1553 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இவற்றுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த தேர்தலின்போதே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் அப்போது போட்டியிட இருந்த வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், கட்சி சின்னம் பொறிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து காரணமாக அவற்றை அப்படியே அகற்றாமல் பத்திரமாக வைத்திருந்தனர்.