கடந்த 7 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த 14 பேர் மீட்பு அதிகாரிகள் அதிரடி

அரக்கோணம், ஜூலை 11: அரக்கோணம் அருகே 7 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்த 14 பேரை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பருவமேடு பகுதியில் காஞ்சிபுரம் அடுத்த கூரம் பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மரம் வெட்டும் தொழிலில் சிலர் கொத்தடிமைகளாக ஈடுபடுவதாக கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், சப்-கலெக்டர் இளம்பகவத், தாசில்தார் ஜெயகுமார் மற்றும் கொத்தடிமைகள் விடுவிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் சம்பத் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது, விவசாய நிலத்தில் 4 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 14 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள் மீட்டனர். இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அருகே பெரிய கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். மேலும், விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதும், அவர்களுக்கு மொத்தமாக ₹1000 தான் இதுவரை கொடுத்து உள்ளதும் தெரிந்தது. மேலும், ₹35 ஆயிரம் கொடுத்து விட்டுதான் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர் என தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் மீட்டு அழைத்து சென்றனர்.

Related Stories: