கோவை, ஜூன் 25: தன்னுடன் பேச மறுத்ததால் காதலன் ஒருவர் தனது காதலியை குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் அமிர்தா (20). இவர் சொர்ணூர் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த சுரேஷ் (22) என்பவருடன் அமிர்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அமிர்தாவுக்கு கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் அச்சகம் ஒன்றில் பயிற்சியாளராக பணி கிடைத்துள்ளது. தடாகம் சாலையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியவாறே அமிர்தா வேலைக்கு வந்து சென்றுகொண்டிருந்தார்.