சிதம்பரம், ஜூன் 12: சிதம்பரம் வட்டத்தில் ஜமாபந்தி நேற்று சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். சிதம்பரம் வட்டத்தில் வரும் 25ம் தேதி வரை நடைபெறும் ஜமாபந்தியில் ஒரத்தூர், திருவக்குளம், சிதம்பரம் ஆகிய 3 குறுவட்டங்களை சேர்ந்த 120 கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. நேற்று காலை ஒரத்தூர் குறுவட்டத்தை சேர்ந்த பூதங்குடி, சி.சாத்தமங்கலம், வெள்ளியக்குடி, வடபாக்கம், வெய்யலூர், ஓடாக்கநல்லூர், வாழக்கொல்லை, கூளப்பாடி, டி.நெடுஞ்சேரி, வாக்கூர், தரசூர், சேதியூர், பாளையஞ்சேர்ந்தங்குடி ஆகிய 13 கிராம மக்களிடம் நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன. வட்டாட்சியர் ஹரிதாஸ், வருவாய் அதிகாரியின் சிறப்பு அலுவலர் ஜான்சிராணி, சமூக நல வட்டாட்சியர் பலராமன், குடிமை பொருள் வட்டாட்சியர் நந்திதா, நில அளப்பு ஆய்வாளர் கார்த்திக்குமார், தலைமை சர்வேயர் வெங்கடேசன், ஆதிதிராவிடர் நலத்துறை உதவியாளர் விக்டோரியா, புள்ளியல் துறை ஆய்வாளர் வரதராஜன், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவசண்முகம், கீரப்பாளையம் வேளாண் அலுவலர் சூர்யலட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பண்ருட்டி: பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கி முகாமை துவங்கி வைத்து முதியோர் உதவித்தொகை, பட்டா ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் வழங்கப்பட்ட மனுக்களை உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.