சென்னை, ஜூன் 11: சென்னையை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தனது பைக்கில் ஆதம்பாக்கம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகன சோதனை நடத்திய ஆதம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூமாதேவி, கண்ணன் சென்ற பைக்கிற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்தார். காவல் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்களை காட்டி வண்டியை எடுத்துச்செல் என பூமாதேவி கண்ணனிடம் கூறினார். அதன்படி, கண்ணன் காவல் நிலையத்திற்கு வந்து பைக்கிற்கு உண்டான ஆவணங்களை காட்டினார். அதற்கு பூமாதேவி, ₹3 ஆயிரம் கொடுத்துவிட்டு உனது பைக்கை எடுத்து செல், என கூறினார். முறையாக ஆவணங்களை காட்டிய பிறகு எதற்கு பணம் கேட்கிறீர்கள், தன்னிடம் தற்போது பணம் இல்லை என கண்ணன் கூறினார். பணத்தை கொடுத்தால் தான் பைக் திருப்பி வழங்கப்படும், என பூமாதேவி கூறியுள்ளார்.