கோவில்பட்டி, மே 24: கோவில்பட்டி மார்க்கெட்டிற்கு எலுமிச்சை பழங்களின் வரத்து குறைவால் கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது. கடும் கோடை வெயிலால் விளைச்சல் குறைந்துள்ளதால் எலுமிச்சை பழங்கள் பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவில்பட்டி மார்க்கெட்டிற்கு கழுகுமலை, வானரமுட்டி, சங்கரன்கோவில், கள்ளிகுளம், குருவிகுளம், பிள்ளையார்நத்தம், தேவர்குளம், இளையரசனேந்தல், சிப்பிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. இப்பகுதியில் பருவமழை பொய்த்தததால் கிணற்று பாசனம் மூலம் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மழையின்மை, கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் எலுமிச்சை விளைச்சல் குறைந்துவிட்டது. கடும் வெயிலின் தாக்கத்தினால் எலுமிச்சை காய் மற்றும் பழங்கள் வெம்பி விடுகிறது. இதனால் மரங்களில் இருந்து எலுமிச்சை பழங்களை பறிக்க முடியாததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
வரத்து குறைவால் கோவில்பட்டி மார்க்கெட்டில் எலுமிச்சை விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது கோடை கால சீசன் என்பதால் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனாலும் விலை உயர்ந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.