30 ஆண்டுகளுக்கு பின்னர் ஓட்டப்பிடாரம் தொகுதியை வென்ற திமுக

தூத்துக்குடி, மே 24: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஓட்டப்பிடாரம் தனி தொகுதி 1962ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் இதுவரை நடந்த 13 சட்டமன்ற தேர்தல்களில் 3 முறை காங்கிரஸ், தலா ஒரு முறை சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், திமுக ஆகியவை வெற்றி பெற்றுள்ளன. 2 முறை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார். 4 முறை அதிமுக வாகை சூடியுள்ளது. இதில் முத்தையா 1967-ல் சுதந்திரா கட்சி சார்பிலும், 1971-ம் ஆண்டு பார்வர்டு பிளாக் சார்பிலும், 1989-ம் ஆண்டு திமுக சார்பிலும் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றனர். இந்நிலையில், புதிய தமிழகம், பாரதிய ஜனதா, சமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அதிமுக தற்போதைய இடைத்தேர்தலை சந்தித்தது. ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தவரை புதிய தமிழகம் கட்சிக்கு தனி செல்வாக்கு உண்டு. மேலும், அதிக முறை வென்றதால் அதிமுகவுக்கும் தனியாக வாக்கு வங்கி இருக்கிறது. அதேபோல் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜனை விட திமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் தான் குறைவாக பெற்று 2வது இடம் பெற்றார்.

இதனால் தற்போது அதிமுகவுடன் புதிய தமிழகம் இணைந்திருப்பது பெரிய பலமாக பார்க்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் மோகன் ஏற்கனவே 2006-11-ம் ஆண்டு வரை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளதால், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். 6 அமைச்சர்கள் தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொண்டது, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் 2 முறை தொகுதிக்கு வந்து மோகனுக்காக வாக்கு சேகரித்தது என பல கூடுதல் பலங்கள் இருந்தன. ஆனால், இந்த கணக்கையெல்லாம் தவிடு பொடியாக்கி திமுக வேட்பாளர் சண்முகையா, அதிமுக வேட்பாளர் மோகனை விட 19,657 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்து திமுகவினர் கூறும்போது, ‘திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை பிரசாரம் மேற்கொண்டார். மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி வாக்கு சேகரித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ.,  உள்ளிட்டோர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவே எங்களுக்கு பெரிய பலமாக அமைந்தது. மேலும், சண்முகையாவின் மனைவி சுகிர்தா 2006 - 11-ம் ஆண்டு வரை ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவராக பணியாற்றி உள்ளார். இவையெல்லாம் சேர்த்து திமுகவுக்கு பலம் சேர்த்து, மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளது’ என்றனர்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

சின்னப்பன்     அதிமுக     70,139

ஜெயக்குமார்     திமுக     41,585

மார்க்கண்டேயன்     சுயேச்சை     27,456

ஜோதிமணி     அமமுக     9,695

காளிதாஸ்     நாம் தமிழர் கட்சி    4,628

நடராஜன்     மக்கள் நீதி மய்யம்     1,399

பொன்ராஜ்     நாம் இந்தியர் கட்சி     458

தீபா வாலண்டினா     சுயேச்சை     778

மாரிமுத்து     சுயேச்சை     233

முருகானந்தம்     சுயேச்சை     527

ராஜாமணி     சுயேச்சை     218

ராஜிவ்காந்தி     சுயேச்சை     634

வினோத்குமார்     சுயேச்சை     249

ஹரிஹரன்     சுயேச்சை     290

நோட்டா                    1,386

வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா

விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட 14 வேட்பாளர்களில் 6 பேரை தவிர மற்ற அனைவரும் நோட்டாவை விட அதாவது ஆயிரத்துக்கும் குறைவாகவே வாக்குகளை பெற்றிருந்தனர்.

Related Stories: