கரூர், மே19: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4மணி வரை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா கடந்த 12ம்தேதி மாலை நடைபெற்ற கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து, முக்கிய விழாவான பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர், தாந்தோணிமலை, வெங்கமேடு, வடிவேல் நகர், கரூர் நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 44 பூத்தட்டுகள் அலங்கரிக்கப்பட்டு மேளதாளத்துடன், நேற்று முன்தினம் இரவு 10.30மணி முதல் நேற்று அதிகாலை 4மணி வரை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.