பல்லாவரம், மே 8: அனகாபுத்தூர் நகராட்சி குளத்தில் குப்பைகள், கழிவுநீர் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. அனகாபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் பூங்கா அமைந்துள்ளது. காலை, மாலை நேரங்களில் இந்த பகுதி மக்கள் பூங்காவில் நடைபயிற்சி, யோகாசனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பூங்கா அருகே குளம் ஒன்று அமைந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் இதனை முறையாக தூர்வாரி பராமரிக்காததால் தூர்ந்து காணப்படுகிறது. மேலும், இந்த குளத்தின் அருகே நகராட்சி குப்பை கிடங்கு உள்ளதால், அங்கிருந்து காற்றில் குப்பைகள் பறந்து குளத்தில் விழுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் விடப்படுவதால் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது.