செங்கல்பட்டு, மே 8: செங்கல்பட்டு ராட்டின கிணறு அருகே தண்டுகரை பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு செல்வதற்கு ரயில்ேவ தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக செங்கல்பட்டு நகரிலிருந்து தண்டுகரை பகுதிக்கு செல்பவர்கள், பட்டரவாக்கம், தேனூர், அமணம்பாக்கம், ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், கூலித்தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இந்த வழியாக செல்வதால் குறைந்த நேரத்தில் செங்கல்பட்டு நகரத்துக்கு செல்ல முடியும். இந்நிலையில் தண்டவாளத்தின் இரு பகுதிகளிலும், பொதுமக்கள் சென்று வந்த பாதையை மறித்து ரயில்வே துறையினர் இரும்பு தடுப்பு அமைத்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு ரயில்ேவ பாதுகாப்பு படை, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் மற்றும் டவுன் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.