கழுகுமலை, ஏப்.21: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் சித்ரா பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை, மற்ற பிற கால பூஜைகள் நடந்தன. மாலை 6 மணிக்கு சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் பங்கேற்று கழுகாசலமூர்த்தி கோயிலில் இருந்து தொடங்கி கிரிவலபாதையில் மலையைச் சுற்றி கிரிபிரகார வீதிவழியாக கோயிலை வந்தடைந்தனர். இதையடுத்து கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பவுர்ணமி கிரிவலக் குழு தலைவர் மாரியப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.