பட்டுக்கோட்டை, ஏப். 12: பட்டுக்கோட்டை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் நேற்று வாக்கு சேகரித்தார். அதன்படி பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், பெரியார் சிலை, மணிக்கூண்டு, அறந்தாங்கிரோடு முக்கம் காந்தி சிலை, தலைமை தபால் நிலையம், கண்டியன்தெரு கைகாட்டி ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த திமுக ஆட்சி காலத்தில் தலைவர் கலைஞர் ஆட்சி பொறுப்பேற்று நடத்தியபோது பட்டுக்கோட்டை பகுதியிலும், விவசாய பெருமக்கள் வாழ்கின்ற பகுதியிலும் நம்முடைய தேவைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் 5 மாதத்துக்கு முன்னதாக ஏற்பட்ட கஜா புயலால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. தென்னை விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஒத்துழைப்போடு ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு வட்டி இல்லாத கடனை அகில இந்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணையுடன் உருவாக்கி கிராம புறங்களில் தென்னை வளர்ப்பு கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி அதில் விவசாய அதிகாரிகளை ஒருங்கிணைத்து 3 வருடத்தில் காய்ப்புக்கு வருகிற கன்றுகளை உருவாக்கி அந்த தென்னை விவசாயிகள் வாட்டத்தை நிச்சயமாக போக்குவேன்.