நித்திரவிளை, மார்ச் 27: தென்னிந்தியாவில் புகழ்வாய்ந்த கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவை காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவர். விழாவின் முக்கிய நிகழ்வு குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஆகும். இதில் நோய்நொடி இல்லாமல் வாழ அம்மனை வேண்டி குழந்தைகளை தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்ள வைப்பர். அதுபோல் திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் அம்மனை வேண்டி நேர்ச்சையில் கலந்து கொண்டு, பின்னர் பிறக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்ள வைப்பர். மேலும் இந்த கோயிலில் பல்வேறு பரிகார பூஜைகள், நேர்ச்சைகள் நடத்தப்படுகின்றன. இதனால் பக்தர்கள் மத்தியில் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்றாக விளங்கி வருகிறது.இக்கோயிலில் இந்த ஆண்டு தூக்கத்திருவிழா வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிறப்பு நிகழ்வான தூக்க நேர்ச்சை ஏப்ரல் 8ம் தேதி நடக்கிறது. விழா சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடந்தது. கோயில் கமிட்டி தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன்குமார், உறுப்பினர்கள் பிரேம்குமார், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.அவர்கள் கூறியதாவது: ஒவ்ெவாரு ஆண்டும் பங்குனி மாதம் தூக்கத்திருவிழா நடைபெறுகிறது. பங்குனி மாத பரணி நட்சத்திரத்தில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படும். இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை நேர்ச்சையில் பங்கு கொள்ள வைப்பர். நேர்ச்சையில் பங்கு கொள்ள அலுவலகத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு 1,565 குழந்தைகள் நேர்ச்சையில் கலந்து கொண்டனர். நேர்ச்சையில் கலந்து கொள்ள ஆன்லைன் பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்ள எங்கள் அலுவலகத்தில் 1,200 பேர் ஏற்கனவே பெயர் பதிவு செய்துள்ளனர். அதன்படி திருவிழா தொடங்கிய பின்னர் இன்னும் சுமார் 1,000 குழந்தைகளுக்கு மேல் பெயர் பதிவு செய்யப்படும். குறைந்தது 2,000 குழந்தைகளுக்கு நேர்ச்சை தூக்கம் நடைபெற வாய்ப்பு உள்ளது. திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம், ஓய்வு அறை, தாய்மார்களுக்கு என தனி அறை ஏற்பாடு செய்யப்படும். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழக மற்றும் கேரள அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.