திருப்புவனம், மார்ச் 26: மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச்சாலையாக அமைக்க கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக மதுரை-பரமக்குடி இடையே 76 கிமீ சாலையை மட்டும் நான்கு வழிச்சாலை அமைக்க முடிவெடுத்து ரூ.937 கோடி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி கடந்த 2015ம் ஆண்டு திட்டத்தை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். செப்டம்பர் 2018ல் நான்கு வழிச்சாலை மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவித்தார். மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் இருந்து சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பார்த்திபனூர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைப்பதற்காக 40 சிறு பாலங்களும், 88 கால்வாய் பாலங்களும், 60 குழாய் பாலங்களும், சிலைமான், திருப்புவனம், லாடனேந்தல் உட்பட 9 இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சாலை அமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.