மதுரை, மார்ச் 26: தென்மாவட்ட அளவில் மிகப்பெரிய மருத்துவமனையான மதுரை அரசு மருத்துவமனையில் 4 ஆயிரத்து 500 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். உள் நோயாளிகளுடன் உறவினர்களும் தங்கி உள்ளனர். ஒரு நோயாளிக்கு இருவர் வீதம் வைத்துக்கொண்டால் கூட 9 ஆயிரத்து 500 பேர் மருத்துவமனையில் தினமும் தங்குகின்றனர். மேலும் வெளிநோயாளிகளுடன் உறவினர்கள் சிலரும் வந்து செல்கின்றனர். இதனால் இம்மருத்துவமனை தினமும் சராசரியாக 20 ஆயிரம் பேரை சந்திக்கிறது. இவர்கள் மருத்துவமனை வளாகத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குடிநீரை காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலை இருப்பதால், மருத்துவமனை பகுதியில், தரமில்லாத குடிநீர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவமனையில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க யாரும் நடவடிக்கை எடுப்பதாக ெதரியவில்லை. குடிநீர் கிடைக்காமல் அலையும் நோயாளிகள் அவர்களது உறவினர்களைப் பற்றி, மருத்துவமனை அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அல்லது பொதுநல அமைப்பினரோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. தற்போது கோடை காலம் துவங்கிவிட்டது. நகர் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது.