சேத்தியாத்தோப்பு, மார்ச் 22: சேத்தியாத்தோப்பு அருகே நெல்லிக்கொல்லை சாலையை துரிஞ்சிக் கொல்லை, மதுவானை மேடு, பெரிய நெல்லிக்கொல்லை ஆகிய கிராமத்தில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வந்தனர். இதனை சுட்டி காட்டி தினகரன் நாளிதழில் செய்திவெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 3 மாதத்திற்கு முன் டெண்டர் விடப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கருங்கல் ஜல்லிகள் கொட்டி செம்மண் போட்டு சமன் செய்தனர். அதன் பின்னர் எவ்வித பணியும் நடக்கவில்லை. தற்போது ஜல்லிகள் பெயர்ந்து செம்மண் புழுதி பறந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. மூன்று கிராமத்திற்கும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகியவை செல்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது.