ஓட்டப்பிடாரம், மார்ச் 22: குறுக்குச்சாலை அருகே பணியிட மாற்றத்தைக் கண்டித்து சத்துணவு அமைப்பாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அடுத்த சந்திரகிரி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி விஜயா (35). இவர், குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக விஜயா, பெரியநத்தம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியில் சேருமாறும் அறிவுறுத்தப்பட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜயா, நேற்று காலை வீட்டில் இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் நெருக்கடி காரணமாக சத்துணவு ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.