துரைப்பாக்கம், மார்ச் 22: துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை சாலையோர மரங்களை அகற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். சென்னை துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து பல்லாவரம் வரை சுமார் 9 கிமீ தூரத்துக்கு துரைப்பாக்கம் 200அடி சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே இருந்து பல ஏக்கர் சதுப்பு நிலம் உள்ளது. இந்த நிலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மரங்கள் உள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை சிறிது நேரம் மரத்தின் நிழலில் நிறுத்தி, ஓய்வெடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாலையோரத்தை சுத்தம் செய்வதாக, மரக்கிளைகளை உடைப்பதாக கூறி வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அங்குள்ள பெரும்பாலான மரங்களை வேறோடு அகற்றி வருகின்றனர்.