குறிஞ்சிப்பாடி, மார்ச் 21: தமிழகத்தில் ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயில் சுட்டெரிக்க துவங்கியது. பொதுமக்கள் வெயிலால் வெளியில் வர முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்க தர்பூசணி, வெள்ளரி பழம், வெள்ளரி பிஞ்சு மற்றும் பழங்களை பொதுமக்கள் அதிகளவில் விரும்பி சாப்பிடுவர். இதற்காக, காலங்களுக்கு ஏற்றாற்போல், தர்பூசணி, வெள்ளரி போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வடலூர் அடுத்த மருவாய், ஓணாங்குப்பம், சேராக்குப்பம் ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் தங்களின் நிலங்களில் தற்போது வெள்ளரி பிஞ்சு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாற்பது நாள் பயிரான வெள்ளரி பிஞ்சு தை மாதம் விதைக்கப்பட்டு, மாசி மாதம் அறுவடை செய்யப்படுகிறது.