சென்னை, பிப். 19: திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த எஸ்தர் பியூலா ராணி (42) போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு,2 மகள், ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் யாஷிகா சினிமாவில் நடித்து வந்தார். சென்னை ஜிகேஎம் காலனியை சேர்ந்த மோகன்பாபு (எ) அரவிந்த் என்பவருக்கும், மகளுக்கும் காதல் ஏற்பட்டு அவர்கள் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த 12ம் தேதி என் மகள் யாஷிகா எனக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி அனுப்பினார். அதை பார்த்து நான் உடனே மகளை தொடர்பு கொண்டேன். ஆனால் அவரது போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அதே இடத்தில் வசிக்கும் அஜித் என்பவருக்கு போன் செய்தேன். அவர், பார்த்து விட்டு உங்கள் மகள் தூக்கிட்டு இறந்துவிட்டார் என்று கூறினார். நான் சென்னை வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், என் மகள் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்தனர். அப்போது, நான் என் மகளை புதைக்க சொன்னேன். ஆனால் மோகன் பாபு நண்பர் அஜித் எரிக்கலாம் என்று கூறினார். அதற்கு நான் என் மகள் சாவில் மர்மம் உள்ளது, இதனால் எரிக்க கூடாது என்றேன்.