திருப்போரூர், டிச.11. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான ஓ.எம்.ஆர். சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் உள்ளன. சென்னையில் உள்ள அனைத்து பிரபல ஒட்டல்களும் கந்தன்சாவடி முதல் கேளம்பாக்கம் வரை ஓ.எம்.ஆர். சாலையின் இருபுறமும் தங்களது கிளைகளை திறந்து உள்ளன. இந்நிலையில் இந்த சாலையில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் வடமாநில தொழிலாளர்களும், உள்ளூர் தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள், ஏ.டி.எம்.கள், ஷாப்பிங் மால்களில் ஏராளமான செக்யூரிட்டி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களால் இதுபோன்ற விலை உயர்ந்த ஓட்டல்களில் சென்று சாப்பிட முடியாத நிலை உள்ளது. இதனால் உயர்ரக ஓட்டல்களுக்கு ஈடாக தள்ளுவண்டி கடைகள், மொபைல் உணவகங்கள், கையேந்தி பவன்களும் உருவாகி உள்ளன. இவற்றில் விலை குறைவாக இருப்பதாலும், உடனுக்குடன் தயாரித்து சூடாக தருவதாலும் மென்பொருள் பொறியாளர்களும், மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்கும் உயர் வருவாய் பிரிவினரும் கூட இந்த மொபைல் உணவகங்களுக்கு செல்லத் துவங்கினர்.