வேலூர், டிச.11: அரசு அலுவலகங்களுக்கு இனி எல்காட் இ மார்க்கெட் மூலம் மின்னணு சாதனங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அனைத்து துறைகளின் அலுவலகங்களுக்கும் தேவையான ஸ்டேஷனரி பொருட்கள், பர்னீச்சர் பொருட்கள், கணினிசார்ந்த பொருட்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்வதற்கான அரசின் நடைமுறைகள் தனியாக வகுக்கப்பட்டுள்ளன. இதில் கணினி உட்பட மின்னணு சாதனங்களை தமிழ்நாடு மின்னணு கழகமான எல்காட் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். இதற்காக துறைவாரியாக தனித்தனியாக கருத்துருக்கள் அனுப்புவதற்கும் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கணினி மற்றும் அது சார்ந்த சாதனங்களை வாங்குவதில் பெருமளவு குளறுபடிகள், முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதனை தவிர்க்க அரசு நிறுவனங்களுக்கான பொருட்களை வாங்குவதில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க ஆன்லைன் கொள்முதல் எனும் நடைமுறைக்கு அரசுத்துறைகளை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.