புதுப்பெண்ணுக்கு மயக்க விபூதி கொடுத்து 13 சவரன் நகைகள் கொள்ளை மர்ம ஆசாமி கைவரிசை ‘நான் உங்கள் கணவரின் உறவுக்காரன்’

திருப்பத்தூர், நவ.14: வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணிடம் கணவரின் உறவுக்காரன் எனக்கூறி மயக்க விபூதி கொடுத்த மர்ம ஆசாமி 13 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த அகரம் கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(25). திருப்பத்தூரில் வாழை மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகி(19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் கார்த்திக் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சண்முகி மட்டும் தனியாக இருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர், ‘நான் உங்கள் கணவரின் உறவுக்காரர். எனது மகளுக்கு காதணி விழா வைத்துள்ளேன். நீங்கள் அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கோயில் பிரசாதம் என்று கூறி விபூதி கொடுத்தார். அதை நெற்றியில் வைத்த உடனேயே சண்முகி மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த சண்முகி, தனது கழுத்தில் இருந்த நகை உட்பட பீரோவில் இருந்த சுமார் 13 சவரன் நகைகள் மற்றும் அந்த நபரை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த விபூதியில் மயக்க மருந்து கலந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த சண்முகி உடனடியாக தனது கணவருக்கு தெரிவித்தார். இதையடுத்து கார்த்திக், வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். பின்னர், குரிசிலாப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணிடம் மயக்க விபூதி கொடுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: