தூத்துக்குடி, செப். 26: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் முறையாகப் பராமரிக்காமல் கால்நடைகளை சாலையில் சுற்றித்திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதோடு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் மாநகராட்சியால் கால்நடைகளை உரிய பட்டிகள் அமைத்து உரிமையாளர்கள் பராமரிக்க
வேண்டும்.
இந்நிலையில், பாளை ரோடு, வடக்கு ரதவீதி, மேற்கு காட்டன் ரோடு, புதிய பஸ் நிலையம், எட்டயபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் எனது உத்தரவின்பேரில் மாநகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலர்களால் பிடிக்கப்பட்டு லெவிஞ்சிபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் கட்டிவைக்கப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி அவற்றை மீட்டுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அவை ஆதரவற்ற மாடுகளாக கருதி அங்கீகாரம்பெற்ற விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும். எனவே, கால்நடைகளை உரிய பட்டிகள் அமைத்து பராமரிக்காமல் சாலைகளில் சுற்றித்திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் எச்சரித்துள்ளார்.