தூத்துக்குடி, செப். 26: செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பழைய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும், பழைய மாணவர் சங்கத்தினரும் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்துள்ள மனு: எங்கள் ஊரில் அரசு பள்ளி கடந்த 1964ல் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளி வகுப்புகள் துவங்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 ஆங்கில வழிக் கல்வியும் துவங்கப்பட்டுள்ளது. ஆனால், காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில் கூட இன்னும் மேல்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு ஒரு சில பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. என்.சி.சி. பிரிவுக்கு உடற்கல்வி ஆசிரியரும் கடந்த 3ஆண்டுகளாக இல்லை. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என 750க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். எனவே, பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கவும், காலி பணியிடங்களை நிரப்பவும், சுற்றுச்சுவர் கட்டுவதோடு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.