திருப்புத்தூர், ஆக. 14: திருப்புத்தூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூர உற்சவ விழாவையொட்டி நேற்று பெண்கள் மஞ்சள் அரைத்து வழிபாடு செய்தனர். திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு மஞ்சள் அரைத்து காப்பு சாற்றும் வைபவம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நடந்த இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மஞ்சள் அரைத்தனர். மதியம் 1.00 மணியளவில் அம்மனுக்கு மஞ்சள்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்கள் கோர்க்கப்பட்டு, அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது.