மிர்பூர்: இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 16 ரன் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. முதல் 2 போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்திய வங்கதேச அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது. லிட்டன் தாஸ் 73 ரன் (57 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), ரோனி தாலுக்தார் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். நஜ்முல் ஷான்டோ 47 ரன், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.