கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் நியூசி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. அதே நேரத்தில் இலங்கை இந்த 2 ஆட்டங்களிலும் வென்றால் இறுதி ஆட்டத்தில் ஆஸியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
அதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இலங்கை நேற்று நியூசிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களம் இறங்கி உள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூசி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய இலங்கையின் ஒஷாடோவை கேப்டன் சவுத்தீ 13ரன்னில் வெளியேற்றினார். அதன் பிறகு வந்தவர்கள் எல்லாம் கணிசமாக ரன் குவித்து ஸ்கோர் உயர வழிவகுத்தனர். கேப்டன் கருணரத்னே 50, குசால் வேகமாக 87(83பந்து, 16பவுண்டரி) ரன் எடுத்ததுடன் 2வது விக்கெட்டுக்கு 137ரன் சேர்த்தனர். அதனையடுத்து ஏஞ்சலோ 47, சண்டிமால் 39 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினர். டிக்வெல்லா மட்டும் 7ரன் என ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தார்.
இடையில் 36வது ஓவரின் போது லேசான மழையில் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் 75ஓவருடன் நிறுத்திக் கொள்ளப்பட்டது. அப்போது இலங்கை முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது. நியூசி தரப்பில் சவுத்தீ 3, மேட் ஹென்றி 2, பிரேஸ்வெல் ஒரு விக்கெட் எடுத்தனர். களத்தில் உள்ள இலங்கை வீரர்கள் டி சில்வா 39, ரஜிதா 16 ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.