வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த ஈ.வி.கே. சம்பத்தின் 98வது பிறந்தநாள் நேற்று சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மாநில துணை தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, நாசே ஜெ.ராமச்சந்திரன், கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், காண்டீபன்,  இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், பா.சந்திரசேகர், அகரம் கோபி, வி.ஆர்.சிவராமன், ஏ.ஜி.சிதம்பரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: வடமாநில தொழிலாளிகள் குறித்து ஒருசிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள், பாஜ மற்றும் ஆர்‌.எஸ்.எஸ். அமைப்பினர். அவர்கள் மறைமுகமாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படையாகவும் பேசி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சீமான் தன்னுடைய விளம்பரத்துக்காக தமிழர்களுக்கும், வடமாநில தொழிலாளிகளுக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அவரது பல்வேறு உரைகளில் அவருக்கு தண்டனை கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

தொழிலாளர்களுக்கு, மாநிலம் கிடையாது, சாதி கிடையாது, மொழி கிடையாது. கைகள் உண்டு, வாய் உண்டு, வயிறு உண்டு. ஒருவேளை சோற்றுக்காக இங்கே உழைக்க வருகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் தமிழ் மரபு. தமிழின் பெயரால், தமிழன் முப்பாட்டன், நாப்பாட்டன் என்று சொல்லிக் கொண்டு இதைப்போன்ற விஷங்களை விதைப்பது தவறு. தமிழக அரசு அம்பு எய்தவர்களை விட்டு விட்டு, அம்பை குறிவைக்க கூடாது. அம்பு எய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: