நாக்பூர்: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நேற்று நாக்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பேட்டிங் செய்யதது. இந்திய அணியில் புதிதாக சூரியகுமார் யாதவ், விக்கெட் கீப்பராக கர் பரத் ஆகியோரும், ஆஸி அணியில் டோட் மார்பி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் நேற்று அறிமுக மாயினர். ஆஸி அணியில் டிராவிஸ் ஹெட்க்கு பதிலாக ஹாண்ட்ஸ்கோம்ப் களமிறக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர், கவாஜா ஆகியோரை தலா ஒரு ரன்னில் முறையே வேகம் சிராஜ், ஷமி ஆகியோர் வெளியேற்றினர்.
அதனால் ஆஸி 2.1ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 2ரன் எடுத்திருந்தது. அதன் பிறகு இணை சேர்ந்த ஸ்மித், லபுஷேன் இணை பொறுமையாக விளையாடி 3 விக்கெட்டுக்கு 82ரன் சேர்த்தனர். லபுஷேன் 49, ஸ்மித் 37 ரன்னில் ஜடேஜா பந்தில் பலியாகினர். முதல் 4 விக்கெட்களும் மெய்டன் விக்கெட்களாக அமைந்தன. தொடர்ந்து அலெக்ஸ் கேரி டி20 ஆட்டம் போல் வேகம் காட்டி 7 பவுண்டரிகளுடன் 33 பந்தில் 36, பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 31ரன் விளாசி வெளியேறினர்.மற்றவர்கள் குறைந்த ரன்னில் ஆட்டமிழக்க ஆஸி 63.5ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 177ரன் எடுத்தது. இந்திய வீரர்கள் ஜடேஜா 5, அஷ்வின் 3 அள்ள, ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அதனையடுத்து முதல் இன்னிங்சை இந்தியா தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் முதல் விக்கெட்டுக்கு 76ரன் எடுத்தது. ராகுலை 20 ரன்னில் அறிமுக வீரர் மார்பி வெளியேற்றினார். இடையில் ரோகித் அரைசதம் விளாசினார். வழக்கத்துக்கு மாறாக அஷ்வின் 2வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அதற்குள் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வர இந்தியா 24 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது. அதனால் 100ரன் பின்தங்கிய நிலையில் களத்தில் உள்ள ரோகித் 56, அஷ்வின் 0 ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.பரத் மாதா கி ஜெய்: இந்திய அணியில் சூரிய குமார்(32), கர் பரத்(29) ஆகியோர் நேற்று சர்வதேச டெஸ்ட் தொடரில் அறிமுகமாயினர். அந்த நிகழ்ச்சிக்கு இருவரது குடும்பத்தினரும் அரங்கத்துக்குள் வந்திருந்தனர். முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி டெஸ்ட் அணிக்கான தொப்பியை சூரியகுமாருக்கு வழங்கினார். மூத்த வீரர் புஜாரா அறிமுக தொப்பியை பரத்துக்கு அளித்தார். பரத்துக்கு இது முதல் சர்வதேச போட்டியாகும். ஆனால் சூரிய குமார் ஏற்கனவே டி20, ஒருநாள் சர்வதேச தொடர்களில் அறிமுகமாகி விட்டார். தொப்பி பெற்ற பிறகு அரங்கில் இருந்த பரத்தின் அம்மா கோனா தேவி, அவரை கட்டியணைத்து உச்சி முகர்ந்த படம் பரவலாகி வருகிறது.