ஐபிஎல் தொடரில் அந்த 3 பேரை அவுட்டாக்க வேண்டும்: உம்ரான் மாலிக் ஆசை

புதுடெல்லி: இந்தியாவில் ஐபிஎல் தொடர் மூலமும் அதிக இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு கிடைத்து வருகின்றனர். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் போன்றவர்கள் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். இதில் மிக முக்கியமானவர் உம்ரான் மாலிக்தான் தொடர்ந்து 150 வேகத்தில் பந்துவீசி, எதிரணி பேட்டர்களை மிரட்டி வருகிறார்

இவர் கடந்த 2021ம் ஆண்டில்தான் ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கினார். சன் ரைசர்ஸ் அணியில் இடம்பெற்ற அவர், அணிக்குள் வந்ததும் முதல் போட்டியிலேயே 150 வேகத்தில் பந்துவீசி, இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். குறிப்பாக, கடந்த சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும், இவர்தான் அதிவேக பவுலராக திகழ்ந்தார். தற்போது 16வது சீசனிலும் இதேபோல், அதிவேக பவுலராக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உம்ரான் மாலிக் கூறுகையில், இந்த 16வது சீசனில் விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும். ஐபிஎல்லில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் இவர்களின் விக்கெட்டை கைப்பற்றியே தீரவேண்டும்’’ என்று கூறி உள்ளார்.

Related Stories: