டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ்: கார்சியா புதிய சாம்பியன்

ஃபோர்ட் வொர்த்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா புதிய சாம்பியனாக முத்திரை பதித்தார். ஆண்டு இறுதி தரவரிசை அடிப்படையில் முதல் 8 இடங்களில் உள்ள முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற இத்தொடர், அமெரிக்காவின் ஃபோர்ட் வொர்த் நகரில் நடந்தது. ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவின் (24 வயது, 7வது ரேங்க்) சவாலை சந்தித்தார் கார்சியா (29வயது, 6வது ரேங்க்). டை பிரேக்கர் வரை இழுபறியாக நீண்ட முதல் செட்டில் 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்ற கார்சியா முன்னிலை பெற்றார்.

அதே வேகத்துடன் அடுத்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய கார்சியா, சபலென்காவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து 7-6 (-7-4), 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி முதல் முறையாக டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 41 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இரட்டையர் பிரிவில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கார்சியா, ஒற்றையர் பிரிவில் பெடரேஷன் கோப்பைக்கு பிறகு வெல்லும் முதல் பெரிய சாம்பியன்ஷிப் பட்டம் இது. ரொக்கப் பரிசாக ரூ.12.8 கோடி மற்றும் கோப்பையை தட்டிச் சென்ற கார்சியா 1375 தரப் புள்ளிகளையும் பெற்றார். இதைத் தொடர்ந்து, உலக தரவரிசையில் கார்சியா 3வது இடத்துக்கும், சபலென்கா 4வது இடத்துக்கும் முன்னேற உள்ளனர்.

Related Stories: