ஈரோடு சிறுமி கருமுட்டை வழக்கு விவகாரம்: சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈரோடு சிறுமி கருமுட்டை வழக்கில் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்த அரசின் உத்தரவையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க அரசுக்கு ஆணையிட்டது.   

இதனிடையே 16 வயது சிறுமியின் வயதை 27 என மாற்றி 9 முறை கருமுட்டை எடுத்ததாக கூறி சுதா ஸ்கேன் சென்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஸ்கேன் சென்டரில் உள்ள உபகரணங்கள் மீது சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மருத்துவமனை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உரிய நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெறாமல் சீல் வைக்கப்பட்டுள்ளது என குற்றசாட்டு வைக்கப்பட்டது.  இதுவரை தங்கள் மருத்துவமனை மீது எந்த புகாரும் இல்லை எனவும் இது திட்டமிட்ட மோசடி எனவும் தங்களுக்கு எதிராக பொய் புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் நீதிமன்றத்தில் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு தரப்பு சிறுமியின் வயதை மாற்றி கருமுட்டை எடுத்ததுவுடன் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்தால் ஆதாரங்களை அழித்துவிட கூடும் என்பதால் தான் நோட்டீஸ் அனுப்பாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறப்பட்டது. மேலும் பொதுமக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, முந்தைய காலத்தில் மருத்துவமனை மீது எந்த புகாரும் இல்லை எனவும் கருமுட்டை விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது தவறு என்று கோரிக்கை சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: