திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கோடை விடுமுறையில் வரும் பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கோயில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது: கோடை விடுமுறையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம், புரோட்டோகால் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால், அதிகளவு பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களுக்கு உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் வழங்கப்படும். நான்கு மாடவீதிகளில் நிழற்பந்தல்கள், வெள்ளை நிற குளிர்ச்சி பெயின்ட், சிகப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் செய்யப்பட்டுள்ளது.