அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை!!

டெல்லி: மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு மத்தியில், மாநிலங்களின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை (27-03-2026) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது ஆதிக்கத்தைத் தொடர்வதால், எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் வலுவான வளர்ச்சிப் பாதை தொடர்வதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை ஊக்குவித்த பிரதமர் மோடி, கோவிட்-19 பெருந்தொற்றின் போது, ​​ஒன்றிய அரசும் மாநிலங்களும் இணைந்து பரிசோதனை, தடுப்பூசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றில் ஒத்துழைத்த முன்மாதிரியான ‘டீம் இந்தியா’ உணர்வை நினைவு கூர்ந்தார். அதே உணர்வு இப்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“அனைத்து மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், இந்த கடுமையான உலகளாவிய நெருக்கடியை நாடு திறம்பட எதிர்கொள்ள முடியும். அதே ‘டீம் இந்தியா’ உணர்வை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கையிருப்பு, விநியோகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் விதிகளால் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

Related Stories: