மொகாலி: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 2போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் மொகாலியில் நடந்து வருகிறது. இதில் நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 175 ரன் எடுத்தார். அவர் முதல் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு வழங்காமல் இந்தியா டிக்ளேர் செய்ததாக விமர்சனம் எழுந்தது. பல ரசிகர்கள் இது தலை மை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் யோசனை என்று நம்பினர்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில், சச்சின் 194 ரன் எடுத்திருந்தபோது, 200 ரன் அடிக்க விடாமல் அப்போதைய கேப்டன் டிராவிட் டிக்ளேர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த விமர்சனம் பற்றி நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் ஜடேஜா அளித்த பேட்டி: நான் களத்தில் இருந்தபோது அணியிடம் இருந்து செய்தி வந்து கொண்டிருந்தது. ரோகித் சர்மா குல்தீப் மூலம் இரட்டை சதம் அடிக்குமாறு செய்தி அனுப்பினார்.
ஆனால் அவரது பரிந்துரையை நான் எதிர்த்தேன், தேநீருக்கு முன் சோர்வாக இருக்கும் இலங்கை பேட்ஸ்மேனை விளையாடச் செய்தால் அவர்களின் ஆரம்ப விக்கெட்டைப் பெறலாம் என நான் தெரிவித்தேன். நான் பேட்டிங் செய்யும்போது பந்து சுழல ஆரம்பித்து, பவுன்சும் இருந்தது. பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இலங்கையை பேட்டிங் செய்ய வைக்கலாம் என நான் சொன்னேன். ஏறக்குறைய 2 நாட்கள் களத்தில் இருந்த அவர்கள் இயல்பாகவே சோர்வாக இருந்தனர். இதனால் அவர்கள் பேட்டிங் செய்ய எளிதாக இருக்காது. எனவே வேகமாக ஸ்கோர் செய்து விரைவில் டிக்ளேர் செய்வதே எங்கள் திட்டமாக இருந்தது, என்றார். இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு முறையும் எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு ரன் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் போது, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறேன். இன்றைய ஆட்டத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்றார். மேலும் 2008ல் எனக்கு ஐபிஎல் பிளாட்ஃபார்ம் வழங்கியதற்காக இந்த நேரத்தில் ஷேன் வார்னேவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.