‘காதலி இறந்ததால் வாழப்பிடிக்கவில்லை’- பெரியமேடு லாட்ஜில் மதுரை வாலிபர் தற்கொலை

சென்னை: மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபுகாந்த்(21). இவர் காதலித்து வந்த தீபா என்ற பெண் கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பிரபுகாந்த் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். பிறகு சென்னைக்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு பிரபுகாந்த் சென்னை வந்துள்ளார். பின்னர் பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் 14வது அறையை எடுத்து தங்கினார்.

இந்நிலையில் நேற்று பிரபுகாந்த் தனது வாட்ஸ் அப் மூலம் இதுவரை எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுக்கு நன்றி, அப்பா மற்றும் அத்தை என்னை மன்னித்துவிடுங்கள், பார்த்துக்கோங்க, யாரையாவது நான் கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள், எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் என்று வீடியோ அனுப்பியுள்ளார். மேலும், இதுதொடர்பாக கடிதம் ஒன்றும் எழுதி வைத்துள்ளார். அதோடு இல்லாமல் வாட்ஸ் அப்பில் வீடியோ பார்த்த அவரது நண்பர்களான லட்சுமன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் பிரபுகாந்திற்கு போன் செய்துள்ளனர்.

அப்போது அவர், எனது தீபா இல்லாமல் என்னால் வாழ பிடிக்கவில்லை, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மெரியமேடு போலீசார் பிரபுகாந்த் தங்கி இருந்த லாட்ஜிக்கு வந்து பார்த்த போது, பிரபுகாந்த் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிறகு உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முன்பு பிரபுகாந்த் எழுதிய கடிதம் மற்றும் அவரது  செல்போனை பைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: