தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்

சென்னை: இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அதை தடுக்க பூஸ்டர் டோஸ் போட இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்கள பணியாளர்கள், 60 வயதை தாண்டியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 10ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடந்த 11ம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று காலை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Related Stories: