மீஞ்சூரில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பொன்னேரி: மீஞ்சூரில் நேற்று மாலை உறவினரின் வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய தேரடி தெருவில் வசிப்பவர் முருகன். இவரது வீட்டுக்கு பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்த குமார் (74), அவரது மனைவி நித்யா (70) ஆகியோர் நேற்று மாலை காரில் வந்தனர். பின்னர் காரை உறவினரான முருகன் வீட்டு வாசலில் சாலையோரமாக நிறுத்தியிருந்தனர். சிறிது நேரத்தில் காரின் இன்ஜினில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. அடுத்த சில நிமிடங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். தகவலறிந்து முருகன் மற்றும் அவரது உறவினர்களும் ஓடி வந்தனர். அதற்குள் கார் கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து பொன்னேரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுமையாக எரிந்து நாசமானது. புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்து எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

The post மீஞ்சூரில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: