மோசடி புகாரில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள்..!

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மோசடி புகாரில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சரை பிடிக்க இதுவரை 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. ரவீந்திரன், விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது.

இந்த இரு வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். புகார் அளித்த விஜய் நல்லதம்பி பணம் நோக்கில் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று அவரது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, ரூ.3 கோடி பணமோசடி புகாரில் 23 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை நிராகரிக்கவேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேலும் 3  தனிப்படைகள் அமைப்பட்டுள்ளது. மதுரை, சென்னையிலும் தனிப்படையினர் முகாமிட்டுள்ள நிலையில் தற்போது கொடைக்கானல், கோவை மற்றும் கேரளாவுக்கு தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

மோசடிப் புகாரில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிடிக்க இதுவரை 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு ஏற்கனவே ஒரு தனிப்படை முகாமிட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ் பலராமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: