அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை: கோத்தகிரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஊட்டி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி  ரூ.33.50 லட்சம் பணம் வசூல் செய்து ஏமாற்றி விட்டதாக கோத்தகிரியை சேர்ந்த சுரேஷ் என்பவர் உட்பட 11 பேர் கடந்த 2016ம் ஆண்டு ஊட்டியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். கோத்தகிரி கட்டப்பெட்டு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாபு (49),  சுமதி (35), ரவி (54), சக்திபிரியா (45), நஞ்சன் (83), மாதி (78) மற்றும்  அணிக்கொரை பகுதியை சேர்ந்த புனிதா (50) ஆகியோர் மோசடி செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு கோத்தகிரியில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய நஞ்சன் இறந்துவிட்ட நிலையில்  பாபு, சுமதி, ரவி, சக்திபிரியா, மாதி மற்றும் அணிக்கொரை பகுதியை சேர்ந்த புனிதா ஆகிய 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயபிரகாஷ் உத்தரவிட்டார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாத கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

Related Stories: