போலீசார் தன் மீது பொய் வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுகின்றனர்!: எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் கதறிய மீரா மிதுன்..!!

சென்னை: காவல்துறையினர் தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டுவதாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நடிகை மீரா மிதுன் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீரா மிதுன் மீது கடந்த 2019 மற்றும் 2020ல் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள விடுதி மேலாளரை தாக்க முற்பட்டது உள்ளிட்ட 2 வழக்குகளிலும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்குகளிலும் மீரா மிதுனை கைது செய்த போலீசார் புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலசுப்ரமணியம் முன் ஆஜர்படுத்தினர். அப்போது காவல்துறையினர் தன் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக நீதிபதி முன்பு நடிகை மீரா மிதுன் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு வழக்குகள் குறித்து முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் அவர் முறையிட்டார்.

இதையடுத்து எழும்பூர் போலீசார் பதிவு செய்த 2 வழக்குகளிலும் 1000 ரூபாய் பிணையுடன் மீரா மிதுனுக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். இத்துடன் நடிகை மீரா மிதுன் 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: