விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ₹3.25 கோடி கடனுதவி-ஆட்சியர் மோகன் வழங்கினார்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும்  தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோர்கள் வங்கிகள்  மூலம் மானியத்துடன் கடன்பெற்று சுயதொழில் தொடங்குவது குறித்து  விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு முகாம் தெய்வானைஅம்மாள்  மகளிர் கல்லூரியில் நடந்தது. ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி ரூ.3.25  கோடிமதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலையினை வழங்கினார்.

தொடர்ந்து  அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில்  பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. மேலும், இளம் தொழில்முனைவோர்கள் தொழில்  தொடங்க ஏதுவாக வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவியும்  வழங்கி வருகிறது. சிறந்த தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும் என்றால் அனைவரும்  தன்னம்பிகையுடனும், விடாமுயற்சியுடனும் தொழிற்கடனுதவி பெற்று தொழில்கள்  மேற்கொள்ளும் நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிடவேண்டும்.   

பின்தங்கியுள்ள கிராமப்பகுதியினை சார்ந்தபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்  இதுபோன்ற தொழில்முனைவோருக்கான பயிற்சியினை பெற்று வங்கிகள் மூலம் கடனுதவி  பெற்று புதிய தொழில்திட்டங்களை ஏற்படுத்தி தங்கள் பகுதிகளை சார்ந்த  பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திதரவேண்டும். மேலும்,  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து வங்கியாளர்களும், தகுதியான  தொழில்முனைவோர்கள் தொழில்தொடங்குவதற்கு கடனுதவி கேட்டு தங்கள் வங்கியில்  விண்ணப்பித்தால் அதனை பரிசீலனை செய்து விரைந்து வழங்கிடவேண்டும் என்றார். இதில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தாமோதரன், தமிழ்நாடு  ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல்அலுவலர் ராஜேஷ் மற்றும் பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: