அன்னூர்: அதிமுக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது என்று கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார். கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 16 இடங்கள் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் உட்பட மொத்தம் 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சராக இருந்தபோது முறைகேடாக டெண்டர் ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து எஸ்.பி. வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.