புதுக்கோட்டையில் 10 நாட்களுக்கு பின் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!: முண்டியடித்துக்கொண்டு திரண்ட மக்களால் பதற்றம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 10 நாட்களுக்கு பின் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி நடைபெறுவதால் முகாம்களில் முண்டி அடித்துக்கொண்டு திரண்ட மக்கள் டோக்கன் கொடுக்கும் நபரை கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கையைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா 3ம் அலை பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல இடங்களில் பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி கையிருப்பு இல்லாத சூழல் உருவாகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் 10 நாட்களுக்கு பின் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட 2 சுகாதார மாவட்டங்களிலும் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் பற்றாக்குறையால் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இன்று 1000 டோஸ் தடுப்பூசிகள் வந்ததை அடுத்து சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கோவாக்சின் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 2வது தவணை போடுவதற்காக குவிந்தனர். டோக்கன் பெற்றவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும் 1000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி இருந்ததால் மீதமுள்ளவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Related Stories: