வேலூர்: வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளில் 3வது நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடிய நிலையில் கே.வி.குப்பம்(தனி) தொகுதியில் மட்டும் ஒரு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) என 5 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் காட்பாடி தொகுதியில் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 4 பேர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். அதேபோல், வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உட்பட சுயேச்சை வேட்பாளர் என மொத்தம் 4 பேரும், கே.வி.குப்பம்(தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் கே.சீதாராமன் உட்பட 3 பேரும் குடியாத்தம்(தனி) தொகுதியில் அதிமுக சார்பில் ஜி.பரிதா உட்பட 3 பேரும், அணைக்கட்டு தொகுதியில் திமுக சார்பில் ஏ.பி.நந்தகுமார், அதிமுக சார்பில் டி.வேலழகன் உட்பட 3 பேரும் என மொத்தம் 16 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.