சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது. உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளின்படி இந்த இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் தவறான அணுகுமுறை காரணமாக மாணவர் சேர்க்கை இன்றுவரை நடைபெறவில்லை. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்தும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் அவ்வாறு செய்யாமல் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு தான் உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்றுத் தரவேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது.