ஓபிஎஸ் முகம் பொறித்த முகமூடி.. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே, அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் முழக்கம்!!

சென்னை : அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் முகம் பொறித்த முகமூடி அணிந்து வந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் ஆளும் கட்சியான அதிமுகவில் அடுத்தடுத்து பிரச்னை எழுந்து வருகிறது. முதல்வர் வேட்பாளர் யார்? சசிகலா அதிமுகவில் இணைவாரா? தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் என பரபரப்பாக இருக்கும் அதிமுகவின் உறுப்பினர்கள் இரு பிரிவினராக பிரிந்துள்ளனர். அதாவது ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என ஒரு அணியும், 3 ஆண்டுகளாக ஆட்சியை சிறப்பாக நடத்தி வரும் ஈபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என மற்றோரு அணியும் கூறுகிறது.

இது தொடர்பாக விவாதிக்கவே இன்று அதிமுக செயற்குழு கூட்டம் கூடி இருக்கிறது. தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி பணி என பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருந்தாலும் முதல்வர் வேட்பாளர் பற்றிய விவாதமே பிரதானமாக திகழ்கிறது.

இந்த நிலையில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் முகம் பொறிக்கப்பட்ட முகமூடி அணிந்த படி கூட்டத்திற்கு வந்துள்ளனர். முதல்வர் வேட்பாளர் பற்றி விவாதிக்கப்பட இருப்பதால், தங்களது பலத்தை காட்ட முகமூடி அணிந்து வந்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனிடையே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே என்ற பதாகைகளுடனும் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்றும் முழக்கமிட்டு துணை முதல்வரின் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

Related Stories: