ஆம்பூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரகத்தில் சாணாங்குப்பம், மாச்சம்பட்டு, துருகம், ஊட்டல் உள்ளிட்ட காப்பு காடுகள் உள்ளன. இந்த காப்பு காடுகளில் அதிகளவில் மான்கள், காட்டு பன்றிகள், மலைபாம்புகள், சிறுத்தைகள் ஆகியவை வசித்து வருகின்றன. தொடர்மழை காரணமாக காடுகளில் ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் உருவாகி அடர்ந்த நிலையில் உள்ளதால் தற்போது இந்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் நடமாட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுக்குள் சென்ற காளையை தேடி வந்தவர்கள் அங்கு இரை தின்று கொண்டிருந்த 3 சிறுத்தைகளை கண்டு தப்பி ஓடி திரும்பினர். மாதகடப்பா தேவுடுகானாறு அருகே சென்ற ஆடுகளை அங்கிருந்த சிறுத்தை அடித்துகொன்று தின்றது.