கோவை: கோவை இருகூர் பகுதியில் ஆயுதங்களுடன் ‘உலா’ வரும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க வந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை அடுத்த இருகூர் பகுதிகளில் கால்சட்டை மட்டும் அணிந்தபடி மர்மநபர்கள் இரவில் உலா வருவதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து அங்குள்ள மக்கள் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சியில் 7 மர்ம நபர்கள் மேலாடை இல்லாமல் கால்சட்டை மட்டும் அணிந்த படி ஒரு பங்களா வீட்டை நோட்டமிட்ட படி ஒருவர் பின், ஒருவராக நடந்து செல்கின்றனர். அவர்கள் கையில் ஆயுதங்கள் வைத்திருந்ததுடன், யாராவது பிடித்தால் நழுவி செல்ல வசதியாக உடல் முழுவதும் எண்ணெய் பூசியுள்ளனர். எனவே அவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.